இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய அணி இதுவரை 3 முறை மட்டுமே இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 1971, 1986, 2007ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இவை அனைத்தும் 3 போட்டிகள் கொண்ட தொடராகும். 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் புகழாரம்
இந்நிலையில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத் தர ஒரு பென் ஸ்டோக்ஸ் உள்ளார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். அதில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டாப் ஆர்டரில் உள்ளனர். பவுலிங்கில் ஷமி, பும்ரா என மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் சிறந்த வீரர்களுக்கு இடையே குறைந்த நாட்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ரிஷப் பண்ட்.
இந்தியாவின் பென் ஸ்டோக்ஸ்
ரிஷப் பண்ட் இதுவரை மறக்க முடியாத 3 சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். அதுவும் 3 வெவ்வேறு சூழல் மற்றும் வெவ்வேறு அணிகளுடன் ஆகும். இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுத்தருவதற்கு பென் ஸ்டோக்ஸ் இருப்பது போன்று இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார். ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான்.
காரணம் என்ன
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மூன்று வடிவ கிரிக்கெட்டையும் ஆடும் போதும் அவரிடம் ஒரு தொடர்பு இல்லாமல் போகிறது. எது எப்படி இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் ஆட்டம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. எப்போது அதிரடியாக ஆடுவார், எப்போது தடுப்பாட்டம் ஆடுவார் என்பதில் குழப்பத்தை உண்டாக்குகிறார். இதுவே அவரின் சிறப்பு என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.