கொரோனா
இந்திய அணியில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட் என 4 பேருக்கு கொரோனா உறுதியானது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்திருந்தது. எனினும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5வது போட்டியை ரத்து செய்ய வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துவிட்டது. ஆட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
குழப்பம்
ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும், வெற்றியாளர் யார் என்பது குறித்து பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. 5வது டெஸ்ட் போட்டியின் புள்ளி விவரங்கள் குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு 5வது டெஸ்ட் போட்டியை வேறு ஒருநாளில் நடத்தி முடிவை தெரிந்துக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி-க்கு கடிதம்
ஆனால் தீர்மானத்தை மீறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றியாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். எனவே உடனடியாக அதற்கான விசாரணைகளை தொடங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளது.
முதல் சாத்தியம்
இந்நிலையில் 5வது டெஸ்ட் நடைபெறாவிட்டால், யார் வெற்றியாளர் என்பதை முடிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பார்க்கலாம். கொரோனா காரணமாக சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், அதற்காக எந்த புள்ளிகளும் ஒதுக்கப்படாது. எனவே 5வது டெஸ்ட் போட்டியை கொரோனாவுக்கான காரணத்தில் பட்டியலிட்டால், இந்த தொடரில் 2 - 1 என இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
2வது சாத்தியம்
ஒருவேளை இந்த போட்டி கொரோனா காரணத்திற்கு கீழ் கொண்டு வரப்படாமல், இந்திய அணி தானாக முன்வந்து போட்டியில் இருந்து விலகியதாக எடுத்துக்கொள்ளப்பட்டால், இங்கிலாந்து அணியை வெற்றியாளராக அறிவித்து தொடர் 2 - 2 என சமநிலையில் முடிவடையும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறை
ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விதிமுறைகளின் படி இரு அணிகளில் ஏதேனும் விலகினாலோ, அல்லது இரு அணிகளும் சேர்ந்து விலகினாலோ, அந்த போட்டிக்கு எந்தவித புள்ளிகளும் தரப்படாது. எனவே அந்த விதிமுறையின் படி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டிக்கும் புள்ளிகள் தரப்படாது.
இங்கிலாந்து குற்றச்சாட்டு
ஆனால் இது கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்படவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி டாம் ஹாரிசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்படவில்லை. இந்திய வீரர்களின் மனநிலை மற்றும் அணிக்குள் இருக்கும் பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்டது. எனவே இந்திய அணி வெளியேறியதாக அறிவித்து இங்கிலாந்துக்கு புள்ளிகள் தரவேண்டும் எனக்கூறியுள்ளார்.