இங்கிலாந்து தொடர்
இந்திய அணி இன்று முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியாக இது உள்ளது. எனவே இதில் வெற்றி பெறுவதற்கு அணியில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கள் எழத்தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு நெருக்கடி
இதில் அணியின் மற்ற பிரச்னைகளை தவிர்த்து புஜாராவை வெளியில் உட்காரவைக்க வேண்டும் என்ற கருத்து தான் வலுத்து வருகிறது. இதற்கு காரணம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவரின் மோசமான செயல்பாடு தான். மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட இந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
உட்காரவைக்க திட்டம்
இதன் காரணமாக புஜாரவை அணியில் இருந்து வெளியேற்ற இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. தற்போது வரை முதல் விக்கெட்டிற்கு புஜாரா களமிறங்கி வருவதால், கேப்டன் விராட் கோலி 4வது வீரராக களமிறங்குகிறார். புஜாரா வெளியில் சென்றால் கோலி மீண்டும் தனது இடத்திற்கே வந்துவிடுவார். மேலும் 4வது இடத்திற்கு கே.எல்.ராகுல் அல்லது ஹனுமா விஹாரியை கொண்டு வர திட்டங்கள் போடப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.
அனுபவ வீரர்
ஆனால் தற்போதைய டெஸ்ட் அணியை பொறுத்தவரை புஜாரா தான் அதிக அனுபவம் கொண்ட வீரராக உள்ளார். விராட் கோலிக்கு அடுத்ததாக 6 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் அவர் மட்டுமே உள்ளார். எனவே அவர் அணியில் இருந்து நீக்கினால், உலகின் பலம் வாய்ந்த அணிகளின் ஒன்றான இங்கிலாந்தை சமாளிப்பதில் சற்று சிரமம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
விராட் கோலி முற்றுப்புள்ளி
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், புஜாரா குறித்த விமர்சனங்கள் நீண்ட நாட்களாக உலா வருகின்றன. உண்மையை கூற வேண்டும் என்றால் புஜாரா திறமையான வீரர்கள். ஆட்டத்தில் எங்கு பிரச்னை உள்ளது, என்னென்ன தவறுகளை செய்கிறோம் என்பதை அவரே தான் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். அவர் போன்ற அனுபவ வீரர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துக்கொள்வார்கள். விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.
கண்டுக்கொள்ளாதீர்
இந்த கருத்து எனக்கும், மற்ற அணி வீரர்களுக்கும் பொருந்தும். அணிக்கு எது தேவையோ அதனை சரியாக கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். வெளியில் மக்கள் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். அவை வெறும் வார்த்தைகளே ஆகும். அதனை பெரிதுப்படுத்திக்கொண்டு இருந்தால், நமக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். எனவே அதனை கண்டுக்கொள்ளாமல் நம் வழியில் செல்ல வேண்டும் எனக் கோலி கூறியுள்ளார்.
புள்ளி விவரங்கள்
கடந்த 2020ம் ஆண்டிற்கு முன்னர் வரை 49.48 ஆக இருந்த புஜாரவின் சராசரி ரன் விகிதம் 2020ம் ஆண்டில் இருந்து 26.35 ஆக சரிந்துள்ளது. அவர் கடைசியாக விளையாடிய 30 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய தொடரில் 77 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.