2வது டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் (129) சதம் விளாசி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. ரூட் 180 ரன்கள் குவித்தார். முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2, இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்கள்.
விறுவிறுப்பான 2வது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்ஸில் சற்று தடுமாற்றத்தை சந்தித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது. இதில் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி (56), பும்ரா (34) இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த உதவினர். இதனால் இங்கிலாந்திற்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்ய முடிந்தது. இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்குக் கடைசி இரண்டு செஷன்கள் மட்டுமே இருந்ததால், போட்டியை டிரா செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்திய பவுலர்கள் சாதூர்யமாக செயல்பட்டு விக்கெட்டுகளை சரித்து வெற்றி பெற்றனர்.
சீறிய சிராஜ்
இந்த போட்டியில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுவது முகமது சிராஜ். இந்தியாவின் வெற்றிக்கு சிராஜின் பங்கு மிகப்பெரிய காரணம். இந்திய அணிக்கு ஃபாஸ்ட் பவுலிங்கில் மிகுந்த நம்பிக்கையளிக்கிறார் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அபாரமாக பந்துவீசி, 2 இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வரலாற்று சாதனை
இதன்மூலம், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய பவுலர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்துள்ளார். இதற்கு முன் 1982ல் முன்னாள் கேப்டன் கபில் தேவ் லார்ட்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர், 39 ஆண்டுகளாக பல்வேறு வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு கிடைத்த போதும், இதனை செய்ய முடியவில்லை. ஆனால் இன்று சிராஜ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய நட்சத்திர வீரரை கண்டறிந்துள்ளது.
புகைப்படம்
ஆனால் முகமது சிராஜை சிறுவயதிலேயே கண்டறிந்துள்ளார், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வி.வி.எஸ்.லக்ஷ்மண். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முகமது சிராஜ் சிறுவயதாக இருக்கும் போது லக்ஷ்மணுடன் நின்றுக் கொண்டிருக்கிறார். அதில் லக்ஷ்மண் சிராஜிடம் எதனையோ காண்பிக்க, அதனை வியந்துப்போய் சிராஜ் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
பெருமையான தருணம்
மேலும் அதன் கேப்சனில், ஐதராபாத் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் அப்துல் அசீமின் இல்லத்திற்கு நான் சென்றிருந்த போது தான், முதன் முதலில் சிராஜை பார்த்தேன். கடின உழைப்பின் மூலம் சிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதே எனக்கு பெருமையாக இருந்தது. ஒரு மனிதன் கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் மூலம் வாழ்வில் சாதிக்கலாம் என்பதற்கு சிராஜும் ஒரு உதாரணம். நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் சிராஜ் எனக் குறிப்பிட்டுள்ளார்.