அயர்லாந்து சுற்றுப்பயணம்
இந்தியாவின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளனர். எனவே தென்னாப்பிரிக்க தொடருக்காக உருவாக்கப்பட்ட அணியில் இருந்த பல வீரர்களும் அயர்லாந்து தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படவிருக்கிறார்.
கேப்டனே போகவில்லை
இந்த தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் அனைவரும் திட்டமிட்டபடி ஜூன் 24ம் தேதி அயர்லாந்துக்கு சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வீரர்களும் சென்றுவிட்டனர். தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் அங்கு பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். ஆனால் திட்டத்தை வகுக்கவுள்ள கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் அயர்லாந்துக்கு செல்லவில்லை.
என்ன காரணம்
தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு அனைத்து வீரர்களுக்கும் 3 நாட்கள் ஓய்வு கொடுத்திருந்தது பிசிசிஐ. அதன்படியே அனைத்து வீரர்களும் செயல்பட்டனர். ஆனால் இவர்கள் இருவர் மட்டும் தனிப்பட்ட காரணங்களால் கூடுதல் ஓய்வு நாட்களை எடுத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா மீது தொடர்ச்சியாக எழும் 3வது குற்றச்சாட்டாகும்.
குவியும் விமர்சனங்கள்
ஐபிஎல் தொடரின் போதும் பாண்ட்யா கொடுத்த நேரத்தை விட தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதன் பின்னர் தென்னாப்பிரிக்க தொடரிலும் அனைத்து வீரர்களும் டெல்லிக்கு சென்ற பிறகு, பாண்ட்யா மட்டும் தாமதாக அணியில் இணைந்துள்ளார். தற்போது 3வது முறையாக இதனையே செய்துள்ளார். இதனால் அவர் மீது தவறான கருத்து பரவி வருகிறது. ஒரு கேப்டனாக இருந்துக்கொண்டு தாமதமாக சென்றால் சரியாக இருக்குமா? என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.