இந்தியா -நியூசிலாந்து தொடர்கள்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் கடந்த 24ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் மோதி 5க்கு 0 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை கொண்டுள்ளனர். இதையடுத்து நாளை முதல் சர்தேவ ஒருநாள் போட்டி தொடர் மற்றும் வரும் 21ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடரிலும் இரு அணிகளும் மோதவுள்ளன.
காயமடைந்த ரோகித் சர்மா
கடந்த ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மாங்கானுய்யில் நடைபெற்ற 5வது மற்றும் இறுதி டி20 போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 60 ரன்கள் அடித்திருந்தபோது, அவருக்கு பின்னங்காலில் காயமேற்பட்டது. அவருக்கு அந்த இடத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அடுத்ததாக நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டி தொடரில் மயங்க் அகர்வால் ஆடவுள்ளார்.
டெஸ்ட் அணி அறிவிப்பு
இந்நிலையில் வரும் 21ம் தேதி முதல் துவங்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில தினங்களுக்கு முன்னாள் நடந்த இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கான போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நவ்தீப் சாய்னியும் இடம்பிடிப்பு
டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் இஷாந்த் சர்மாவும் இடம்பிடித்துள்ளார். ஆனால் அவருடைய பிட்னசை அவர் நிரூபிக்க தவறும்பட்சத்தில் அவருக்கு ஆடுவதற்கு வாய்ப்பளிக்கப்படாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் நடந்து முடிந்துள்ள டி20 தொடரின் இறுதி போட்டிகளில் கவனத்தை ஈர்த்த நவ்தீப் சாய்னியும் டெஸ்ட் தொடரில் இடம்பிடித்துள்ளார்.
ரிஷப் பந்த், அஸ்வின் இடம்பிடிப்பு
கேப்டன் விராட் கோலி தலைமையில் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவும் விக்கெட் கீப்பர்களாக விரித்திமான் சாஹா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மன் கில், சத்தீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சாய்னி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.