முதல் போட்டி நாளை துவக்கம்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரை கைகொண்டு, அடுத்ததாக விளையாடிய சர்வதேச ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் 3வதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நாளை துவங்கவுள்ளது.
60 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளை பெற்று இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் உள்ளிட்டவற்றை இழந்து 60 புள்ளிகளுடன் நியூசிலாந்து 6வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் நாளைய போட்டியில் மோதவுள்ளன.
நிபுணர்கள் அறிவிப்பு
இந்நிலையில் 6வது இடத்தில் இருந்தபோதிலும், இந்திய அணிக்கு தங்களுடைய பொறுமையான ஆட்டத்தால் நியூசிலாந்து டப் கொடுக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே கருத்தை தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலியும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த போட்டி மிகுந்த சவால் நிறைந்ததாக இந்தியாவிற்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2017ல் கடைசி தோல்வி
தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 2017 மார்ச் மாதத்தில் தான் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது. அதையடுத்து அங்கு நடைபெற்ற 5 தொடர்களின் 10 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை இழந்திருந்தாலும், சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான இந்த தொடரை அந்த அணி கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.
சிங்கிள்சிற்கே அதிக வாய்ப்பு
இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நாளை துவங்கவுள்ளது. இந்த மைதானத்தில் காற்று அதிகமாக வீசும் என்பதால், சிக்ஸ்கள் மற்றும் பவுண்டரிகளை வீரர்கள் அதிகமாக அடிக்க முடியாது. சிங்கிளாக அடித்தே அணியின் ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.
பலமாக உள்ள எதிரணி பௌலர்கள்
ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா, இந்த டெஸ்ட் போட்டியின் துவக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். இந்த புதிய துவக்க வீரர்களுக்கு நியூசிலாந்தின் பௌலர்கள் டிரெண்ட் போல்ட், டிம் சௌதி மற்றும் கைல் ஜாமீசன் ஆகியோர் மிகசிறந்த டப் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின்
நியூசிலாந்தில் 4 முதல்நிலை பௌலர்கள் களமிறங்கி பந்துவீசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5வதாக ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோமிற்கும் பந்துவீச வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல இந்திய அணியில் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் வித்தியாசமான பந்துவீச்சை அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
4 மணிக்கு துவக்கம்
இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு துவங்கவுள்ள இந்த போட்டி, ஐந்து தினங்களும் ரசிகர்களுக்கு அதிக அளவிலான உற்சாகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து முதலிடத்தை பெறுவதற்கு இந்த தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ள நிலையில், இந்த தொடரை கைப்பற்றுவதன்மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்ல நியூசிலாந்து முயற்சிக்கும்.