எகிறும் எதிர்பார்ப்பு
இந்தியா - நியூசிலாந்து மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளன. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறி உள்ளது.
மல்லுக் கட்டப் போகும் அணிகள்
நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை மிக மோசமாக 4-1 என இழந்துள்ளது. அதை ஈடுகட்ட டி20 தொடரைக் கைப்பற்ற அந்த அணி முயலும். அதே சமயம் இந்தியா நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை இதுவரை கைப்பற்றியதில்லை. எனவே, அந்த குறையைப் போக்க இந்தியா போராடும்.
மாற்றம் இருக்குமா?
இந்த நிலையில், இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் மாற்றம் இல்லாமல் ஆடிய அதே அணியை களமிறக்குமா? அல்லது ஆடுகளத்துக்கு ஏற்ப வீரர்களை மாற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தோல்வி அடைந்த ஆடுகளம்
காரணம், நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன ஹாமில்டனில் தான் மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது. ஆடுகளத்துக்கு ஏற்ப அணித் தேர்வு செய்ய இந்திய முடிவெடுத்தால் நிச்சயம் அணியில் மாற்றம் இருக்கும்.
அதே அணியா?
அதே சமயம், இந்தியா டி20 தொடரின் முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தாலும், அதே அணியுடன் இரண்டாம் போட்டியை சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளது. இதை அப்படியே தொடர எண்ணினால், அணியில் எந்த மாற்றமும் இருக்காது.
பரிசோதனை செய்யும் இந்தியா
இந்திய அணி நியூசிலாந்து டி20 தொடரை உலகக்கோப்பைக்கு ஏற்ப பரிசோதனைகள் செய்ய பயன்படுத்திக் கொண்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் மூன்று ஆல்-ரவுண்டர்கள், மூன்று விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் கொண்ட அணியுடன் இந்தியா களம் கண்டது. இந்த தொடரில் இது வரை வாய்ப்பு பெறாத வீரர்களாக சித்தார்த் கௌல், சிராஜ், ஷுப்மன் கில், குல்தீப் யாதவ், கேதார் ஜாதவ் இருக்கின்றனர்.
என்ன முடிவு எடுக்கப் போகிறார்?
ரோஹித் சர்மா அணியில் தொடர் மாற்றங்கள் செய்வதை விரும்பாதவர். அதே சமயம், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என நினைப்பவர். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு முக்கிய போட்டியில் கேப்டன் ரோஹித் என்ன முடிவு எடுக்கப் போகிறார்?
அணித் தேர்வு முக்கியம்
ஆடுகளத்துக்கு ஏற்ற அணியா? புதிய வீரர்களுக்கு வாய்ப்பா? மாற்றமில்லாத அதே அணியா? அணித் தேர்வில் கேப்டன் ரோஹித் மற்றும் அணி நிர்வாகம் எடுக்கப் போகும் முடிவு தான் மூன்றாவது போட்டியில் இந்தியாவின் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கப் போவதாக இருக்கும்.