விக்கெட் வேட்டை நடத்திய இந்தியா
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், இந்திய பந்துவீச்சின் முன் அந்த அணியின் வீரர்கள் தடுமாறினர். இதையடுத்து, இந்தியா சரசரவென விக்கெட் வேட்டை நடத்தியது. முதல் ஏழு வீரர்களில் ஆறு வீரர்களை ஷமி 3, சாஹல் 2, ஜாதவ் 1 என வீழ்த்தினர்.
குல்தீப் விக்கெட்கள்
கடைசி 3 விக்கெட்கள் மற்றும் அரைசதம் அடித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்களை குல்தீப் யாதவ் விரைவாக வீழ்த்தினார். இதன் மூலம் கடைசி நேரத்தில் நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பு முற்றிலும் தடைப்பட்டது.
இணையத்தில் பரவும் காட்சி
அதில் குறிப்பாக கடைசி விக்கெட்டான ட்ரென்ட் பவுல்ட் விக்கெட்டை வீழ்த்த தோனி, குல்தீப்புக்கு ஒரு யோசனை கூறினார். அதன் படி பந்து வீசிய குல்தீப் அந்த விக்கெட்டை வீழ்த்தினார். இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தோனி யோசனை
இந்த காட்சியில், குல்தீப் பந்துவீசும் முன் தோனி, பவுல்ட் எப்படியும் கண்ணை மூடிக் கொண்டு பந்தை தடுப்பார். அதனால், "ரவுண்ட் தி விக்கெட்" திசையில் பந்து வீசுமாறு குல்தீப்பிடம் கூறினார். குல்தீப் அதே போல பந்து வீச, பவுல்ட் அதே போல தடுக்க, ஸ்லிப் திசையில் எளிதாக கேட்ச் பிடித்தார் ரோஹித் சர்மா.
மீண்டும் நிரூபணம்
தோனியின் அருமை பெருமைகளை அவரது ரசிகர்கள் மின்னல் வேகத்தில் இணையத்தில் பரப்புவார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே. அதே போல, இந்த வீடியோவும் மிக வேகமாக பரவி வருகிறது. தோனியின் அனுபவம் அணிக்கு உதவுகிறது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்தியா வெற்றி
இந்த போட்டியில் நியூசிலாந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிக சூரிய ஒளியால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. இதனால், இந்திய அணிக்கு 49 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தவான் 75*, கோலி 45 எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.