டெஸ்ட் தொடர் வெற்றி
கான்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியின் அருகில் வரை சென்றபோதும், நியூசிலாந்தின் கடைசி ஒரே ஒரு விக்கெட்டை எடுக்காததால் சமனில் முடிவடைந்தது. இதனால் 2வது டெஸ்டில் பவுலிங்கில் அதிக கவனம் செலுத்திய இந்திய அணி பவுலர்கள் ஆட்டத்தை மூன்றே நாட்களில் முடித்துக்கொடுத்தனர்.
சாதனைகள்
விராட் கோலி - ராகுல் டிராவிட் கூட்டணியில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே வெற்றி கண்டுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் 14வது முறையாக டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுகிறது. தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளது.
டிராவிட் பரிசு
இந்த வெற்றியை அனைவரும் கொண்டாடி வரும் வேளையில் ரசிகர்களிடம் டிராவிட்டின் செயல் கவனம் பெற்றுள்ளது. அதாவது கான்பூர் டெஸ்ட் போட்டியில் பிட்ச் சிறப்பாக இருந்தது என பாராட்டி, பிட்ச்- ஊழியர்களுக்கு ராகுல் டிராவிட் ரூ.35,000 நன்கொடை வழங்கினார். அவரின் தனிப்பட்ட இந்த முயற்சி இனி வரும் நாட்களில் சிறப்பான பிட்ச்-களை உருவாக்க ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் எனக்கூறப்பட்டது.
பின்பற்றிய இந்திய அணி
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, பிட்ச்-ஐ உருவாக்கிய ஊழியர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் ரூ.35,000 வழங்கி பாராட்டியுள்ளது. வான்கடே பிட்ச்-ஐ பொறுத்தவரை இந்திய அணி ரன் குவிப்பதற்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தது. இதனால் ராகுல் டிராவிட்டின் செயலை பின்பற்றும் வகையில் இந்திய அணி செய்துள்ளது.