பயிற்சி போட்டி வாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள இந்திய அணிக்கு அங்கே அதிக பயிற்சி போட்டிகள் இல்லை. எனவே, நியூசிலாந்தில் கிடைத்த ஒரு பயிற்சி போட்டி வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்த இந்தியா, இளம் டெஸ்ட் அணி வீரர்களை உள்ளடக்கிய இந்தியா ஏ அணியை களம் இறக்கியுள்ளது.
இருவர் மட்டுமே மூத்த வீரர்கள்
இந்த இளம் வீரர்கள் அணியில் இருவர் மட்டுமே மூத்த வீரர்கள். ஒருவர் முரளி விஜய் மற்றொருவர் ரஹானே. இவர்களில் முரளி விஜய் டெஸ்ட் அணியில் தன் இடத்தை இழந்து மீண்டும் போராடி அணியில் இடம் பிடித்துள்ளார். ரஹானே டெஸ்டில் தடுமாறித் தான் ஆடி வருகிறார்.
இளம் வீரர்களோடு போட்டி
இந்த நிலையில் அணியில் இடம் பிடிக்க இளம் வீரர்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் ரன்கள் குவிக்காமல் சொதப்பி உள்ளனர். இதில் ரஹானே இந்தியா ஏ அணிக்கு கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர்கள் அசத்தல் பேட்டிங்
இந்த பயிற்சிப் போட்டியில் இந்தியா ஏ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, முரளி விஜய் இறங்கினர். முரளி விஜய் 28 ரன்களுக்கு வெளியேறினார். இதே போட்டியில் ரஹானே 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற இளம் வீரர்களான ப்ரித்வி ஷா, மாயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விஜய் ஷங்கர் உள்ளிட்டோர் அரைசதம் அடித்தனர். பார்த்திவ் பட்டேல் 94 ரன்கள் அடித்து சதத்தை 6 ரன்களில் தவறவிட்டார். இந்தியா ஏ அணி 467 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்கள் இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து ஏ அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது.
வாய்ப்பை கோட்டை விட்டனர்
தற்போது நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியோடு டெஸ்ட் போட்டியில் ஆடி வருவதால் இந்த பயிற்சி போட்டியில் நியூசிலாந்தின் முக்கிய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்த போட்டியில் ரன் குவிக்காவிட்டால் தான் ஆச்சரியம். இப்படி எளிதான போட்டியில் இளம் வீரர்கள் எல்லோரும் நன்றாக ஆடிய நிலையில், மூத்த வீரர்கள் முரளி விஜய், ரஹானே சொதப்பி தங்கள் இடத்தை தாங்களே கேள்விக் குறியாக்கி உள்ளனர்.