2வது டெஸ்ட்
கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பிட்ச்-ன் தன்மை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் என இரண்டிற்குமே சாதகமாக செயல்பட்டது. இதே போல அந்த களத்தில் நல்ல ஸ்கோர்களும் இரு அணிகளிடம் இருந்து வந்தன. இதனை பாராட்டி ராகுல் டிராவிட் கூட மைதான ஊழியர்களுக்கு ரூ.35,000 நன்கொடையாக வழங்கினார்.
பிட்ச் நிலைமை
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த போட்டியில் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்திய அணி அதிகப்படியான விக்கெட்டுகளை கைப்பற்றியது. ஆனால் இந்த முறை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் பிட்ச் சாதகமாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு வான்கடே மைதானத்தின் மெயின் 3 பிட்ச்-களில் பெரியளவில் போட்டிகள் ஏதும் நடைபெறைவில்லை. இதன் காரணமாக அங்கு நிறைய புற்கள் முளைத்துள்ளன.
காரணம் என்ன
பிட்ச்-ல் அடர்த்தியாக புற்கள் இருந்தால் பந்தில் எந்தவித டேர்னிங்கும் இருக்காது. இதனால் சுழற்பந்துவீச்சாளர்களின் பாச்சா இங்கு பலிக்காது. ஆட்டத்தின் நாள் நெருங்கிவிட்டதால் புற்களை மிகவும் குறைக்க முடியாது என கள ஊழியர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் பிட்ச்-க்கு தண்ணீர் விடுவது மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிபட்ட களங்களில் வேகப்பந்துவீச்ச்சுக்கு எடுபடுமா என்று கேட்டால், ஆட்டத்தின் முதல் சில மணி நேரங்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் விழலாம். ஆனால் அதன்பிறகு நல்ல பேட்டிங் ட்ரேக்காக மாறிவிடும்.
இந்திய அணிக்கு சிக்கல்
இந்திய அணியின் பலமாக பார்க்கப்படுவது ஸ்பின்னர்களின் தாக்குதல் தான். ஆனால் 2வது டெஸ்ட் போட்டியில் 2 ஸ்பின்னர்களை மட்டும் வைத்துக்கொண்டு அதிகப்படியாக வேகப்பந்துவீச்சாளர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணி வேகப்பந்துவீச்சில் மிகவும் பலமானது. குறிப்பாக கெயில் ஜேமிசன் அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். எனவே இந்திய அணிக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது.