கோலி ரிட்டர்ன்ஸ்
முதல் டெஸ்ட் போட்டியின் போது ஓய்வில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 2வது டெஸ்டிற்கு திரும்புகிறார். இதனால் அவருக்காக எந்த வீரரை அணியில் இருந்து நீக்கப்போகிறார்கள் என்ற கேள்வி உலா வருகிறது. கோலிக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான சதத்தால் தனது இடத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் வேறு வீரர்களின் பக்கம் பார்வை திரும்பியுள்ளது.
தப்பித்த சீனியர் வீரர்கள்
ஃபார்மை வைத்து பார்த்தால் துணைக்கேப்டன் அஜிங்கியா ரகானே நீக்கப்பட வேண்டும் எனக்கோரிக்கைகள் வலுத்து வருகிறது. ஆனால் அவருக்கு ஒருநல்ல இன்னிங்ஸ் கிடைத்தால் போதும் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிடுவார் என்று டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார். இதே போல சட்டீஸ்வர் புஜாரா அணியின் மிக முக்கிய சீனியராக விளங்குகிறார். இந்திய அணி தடுமாறும் முக்கிய போட்டிகளில் புஜாரா காப்பாற்றுவார் என்பதால் அவர் மீது கோலிக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.
அந்த ஒருவீரர் யார்?
இவர்களை தவிர்த்து பார்த்தால் அணியில் மீதம் ஓப்பனிங் வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரே உள்ளனர். இதில் சுப்மன் கில் கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். எனவே மயங்க் அகர்வால் தான் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இது சிறந்த தேர்வாகவும் இந்திய அணிக்கு இருக்கும். ஏனென்றால் ஓப்பனிங் இடத்திற்கு வேறு ஒரு வீரர் அணியில் ஏற்கனவே உள்ளார்.
அடுத்து என்ன திட்டம்
விருதிமான் சாஹாவுக்கு உடல்நிலை சரியாகிவிட்டது என கோலி கூறியுள்ள போதும், அவரை அணியில் சேர்ப்பார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அவருக்கு மாற்றாக வந்த கே.எஸ். பரத் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். அதுமட்டுமின்றி ஓப்பனிங் இடத்தில் அவரின் புள்ளிவிவரங்கள் மிகச்சிறப்பாக உள்ளது. இதனால் ஓப்பனிங் இடத்திற்கு ஒரு வீரரும், விக்கெட் கீப்பரும் கிடைத்துவிடுவார். இந்த திட்டத்தினால் தான் மயங்க் அகர்வால் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.