முதல் இன்னிங்ஸ்
இந்திய அணியில் ஓபனர் மயங்க் அகர்வால் 150 (311) ரன்களும், அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 52 ரன்களும் எடுத்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.
பிட்ச்-ல் திடீர் மாற்றம்
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியில் ரன்கள் சேர்வதற்குள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக ஓபனர் டாம் லதாம் மட்டுமே 10 (14) இரட்டை இலக்க ரன்கள் அடித்தார். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட தொடங்கினர்.
திடீர் குழப்பம்
இது நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே களத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு வரை பவுலிங் செய்துகொண்டிருந்த நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சு எடுபடவே இல்லை. சுழற்பந்துவீச்சிலும், அஜாஸ் பட்டேல் மட்டுமே 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் நியூசிலாந்தின் இன்னிங்ஸின் போது, டாப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்
பிட்ச்-ல் நல்ல ஸ்விங் ஆக தொடங்கியதால், வேகத்துடன் கூடிய பந்துகளை சிராஜ் வீசினார். அதில் சிக்கி நியூசிலாந்தின் டாம் லாதம், வில் யங், டேர்லி மிட்செல் என அடுத்தடுத்து வெளியேறினர். இவர்களுக்கு பின்னர் வந்த ஒரு வீரர்களில் கெயில் ஜேமிசன் மட்டுமே அதிகபட்சமாக 17 ரன்களை சேர்த்தார். இதனால் இறுதியில் 62 ரன்களுக்கு எல்லாம் நியூசிலாந்து அணி சுருண்டது. வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி அடிக்கும் மிக குறைந்த ஸ்கோர் இதுதான்.