தோனி மீது எதிர்பார்ப்பு
தோனி கடந்த ஆண்டு பேட்டிங்கில் பார்ம் இன்றி தடுமாறி வந்த நிலையில், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து பட்டையைக் கிளப்பி உள்ளார். அதனால், அடுத்து நியூசிலாந்து தொடரில் தோனி பட்டையைக் கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தோனி ஹாட்ரிக் அரைசதம்
ஆனால், ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டியிலுமே இந்தியா சேஸிங் செய்தது. அதில் தான் தோனி ஹாட்ரிக் அரைசதம் அடித்தார். இந்த நிலையில், நியூசிலாந்து தொடரில் ஒருவேளை இந்தியா முதலில் பேட்டிங் ஆடினால், தோனி பொறுமையாக ரன் குவிப்பாரா? அல்லது அதிரடியாக ஆடுவாரா?
அமைதியாக ஆடினார்
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறுகையில், ஆஸ்திரேலிய தொடரில் மிக அழுத்தமான நேரங்களில் கூட தோனி மிக அமைதியாக ஆடினார். உலகின் பல கிரிக்கெட் வீரர்கள் அந்த நேரத்தில் பதற்றமடைந்து இருப்பார்கள் என கூறினார்.
தோனியின் சவால் இது தான்
மேலும், தோனியின் சவால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் போது எவ்வளவு அதிரடியாக அவர் ஆட வேண்டும் என்பது தான். சேஸிங் அதை விட கடினமானது. அதில் அவர் ஜீனியஸ் என கூறினார்.
ஏன் இந்த கேள்வி?
இந்த கேள்வியை மைக் ஹெஸ்ஸன் முன்வைக்கக் காரணம், தோனி ஆஸ்திரேலிய தொடரில் இரண்டு போட்டிகளில் மிக பொறுமையாகவே ரன் சேர்த்தார். அதற்கு இந்திய அணி இருந்த சூழ்நிலை, ஆடுகளம் என பல காரணங்கள் இருந்தாலும், முதலில் பேட்டிங் செய்யும் போதும் தோனி அப்படி பொறுமையாக ரன் சேர்க்க முடியுமா? என்பதே ஆகும்.
ஆடுகளங்கள் சாதகம்
தோனியை பொறுத்தவரை, நியூசிலாந்து மண்ணில் இதற்கு முன் ஆடிய அனைத்து போட்டிகளிலும் ரன் குவித்து தள்ளியுள்ளார். அதனால், அந்த ஆடுகளங்கள் தோனிக்கு ரன் குவிக்க பெரிய தடையாக இருக்காது என நம்பலாம்.
அதிரடி காட்டுவாரா?
ஆனால், தோனி இன்னும் பழைய தோனியாக, அதிரடி காட்டுவாரா? அல்லது ஆஸ்திரேலிய தொடர் போல பவுண்டரிகள் அடிக்காமல், ஒற்றை ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவாரா? பார்க்கலாம்.