டெல்லி: இந்தியா.. இந்தியா.. இந்த கோஷங்கள், டெல்லி, பாம்பே, கொல்கத்தா என நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வாயில் இருந்து எதிரொலித்துக்கொண்டுள்ளது. காரணம், ஆசிய கோப்பையில் இன்று பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ள இருப்பதுதான்.
ரசிகர்களின் நாடித்துடிப்பு எப்படி உள்ளது, அவர்களின் எதிர்பார்ப்பு குறித்து, டெல்லியில் 'ஒன் இந்தியா' நிருபர் பூஜா சச்தேவா, சில இளைஞர்கள், இளம் பெண்களிடம் கருத்து கேட்டார். அந்த வீடியோ இதில் இணைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவித்த பெரும்பாலான இளைஞர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பேசினர். டோணி, கோஹ்லி, யுவராஜ், ரெய்னா ஆகிய நான்கு வீரர்கள் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.
சில இளைஞர்கள் தங்கள் வீட்டில் நண்பர்களுடன் இணைந்து டிவி பார்க்க உள்ளதாக தெரிவித்தனர். இதற்காக புரஜக்டர்கள் வாங்கி வைத்துள்ளதாகவும், பெரிய ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க உள்ளதாகவும், இன்று பார்ட்டி டைம் என்றும் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
யுவராஜ் சிங் பழையபடி ஃபீல்டில் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறிய இளம் பெண் ஒருவர், ஐ லவ் யூ கோஹ்லி.. என ஆண் நண்பர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டே உணர்ச்சி பெருக்கில் கருத்து தெரிவித்தார்.
யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விட வேண்டும், டோணி டாப்-ஆர்டரில் இறங்கி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை பறக்க விட வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். ரோகித் ஷர்மா, ஹர்த்திக் பாண்ட்யா மீது எதிர்பார்ப்பு அதிகமுள்ளதாகவும் சிலர் தெரிவித்தனர்.
யுவராஜ்சிங் இனிதான் தனது திறமையை நிரூபிக்கனும் என்று அவசியம் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளாசுவார் என சீக்கிய வாலிபர் ஒருவர் தெரிவித்தார். எல்லோருமாக, இந்தியா.. இந்தியா.. என்ற கோஷத்தோடு பேட்டிக்கு பிரியா விடை கொடுத்தனர்.