இந்தியா - பாக். பதற்றம்
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். வீரர்களும் பதற்றத்துடன் தான் ஆடுவார்கள். தோல்வி அடைந்தால் சொந்த நாட்டு ரசிகர்களே அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து எடுப்பார்கள் என்ற பயம் நிச்சயம் இருக்கும்.
இருதரப்பு கிரிக்கெட் சிக்கல்
இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2012-13 ஆண்டுடன் நின்று போனது. இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தியது.
ஐசிசி தொடர்கள்
அதன் பின் இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே சந்தித்துக் கொள்கின்றன. டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசிய கோப்பை போன்றவற்றில் மட்டுமே இரு நாடுகளும் கடந்த ஆண்டுகளில் ஆடின.
2020 ஆசிய கோப்பை பிரச்சனை
இந்த நிலையில், 2020 ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தது. பாகிஸ்தான் மண்ணில் ஆசிய கோப்பை நடந்தால், இந்தியா அந்த தொடரில் பங்கேற்காது என கூறப்பட்டது. இந்த நிலையில், தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் விட்டுக் கொடுக்க இருப்பதாக தெரிகிறது.
பொது இடத்தில் தொடர்
இதையடுத்து ஆசிய கோப்பை தொடர் கடந்த ஆண்டைப் போல பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. எனினும், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மார்ச் 3 அன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது.
கங்குலியிடம் கேள்வி
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் ஒரே வரியில், இந்த இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கும் என "நச்" பதில் சொல்லி அதிரடியை கிளப்பினார்.
துபாயில் நடக்கும்
கங்குலி கூறுகையில், "ஆசிய கோப்பை துபாயில் நடக்கும். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அதில் பங்கேற்கும்" என உறுதியாக தெரிவித்தார். இன்னும் கூட்டமே நடைபெறாத நிலையில், இதுதான் கடைசி முடிவு என அதிரடியாக கூறி இருக்கிறார் கங்குலி.
பதறிய பாகிஸ்தான்
கங்குலியின் ஒற்றை வரி பதிலுக்கு, பதறிக் கொண்டு வந்து மறுப்பு தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி. அவர் கூறுகையில், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அனைத்து ஆசிய நாடுகளையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். பாகிஸ்தானுக்கும் சில வாய்ப்புகள் உள்ளன என அவர் கூறி இருக்கிறார்.
கடைசி போட்டி
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரில் மோதின. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் மோசமாக ஆடி தோல்வி அடைந்து பாகிஸ்தான் ரசிகர்களின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளானது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் கொட்டாவி விட்டது, போட்டிக்கு முன் பர்கர் சாப்பிட்டது எல்லாம் வேற லெவல் விமர்சனத்தை சந்தித்தது.
பதிலடி முயற்சி
துபாயில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி நிச்சயம், உலகக்கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க முயலும். அந்தப் போட்டிக்கு நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.