கடைசி போட்டி
கடைசியாக இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதியது 2019ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில்தான். அந்தப் போட்டியில் வழக்கம் போலவே இந்தியா வென்றது. பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் எந்தப் போட்டியிலும் மோதியதில்லை. குறிப்பாக இரு தரப்பு தொடர் நடக்கவே இல்லை. இந்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுப்படி பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் மோதாமல் உள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
மணியின் கோரிக்கை
இந்த நிலையில்தான் இரு தரப்பு தொடர்களில் இந்தியா பாகிஸ்தான் மீண்டும் மோத வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஈசான் மணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது சர்வதேச கிரிக்கெட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே இதைச் செய்ய இந்தியா முன்வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
விசேஷ பேட்டி
இதுதொடர்பாக கிரிக்பஸ்ஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டி எது என்றால் அது நிச்சயம் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்தான். ஆனால் இந்திய அரசின் கொள்கை காரணமாக இரு அணிகளும் இரு தரப்பு தொடர்களில் மோதாமல் உள்ளன. ஆனால் இந்த முடிவை இந்தியா மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். அது கிரிக்கெட்டுக்கு நல்லது. அதன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார்.
அது அவர்கள் விருப்பம்
சில நாடுகள் விளையாட்டை விட தங்களது நாட்டின் நலன் முக்கியம் என்று கருதுவது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்கள் விருப்பம். அதேசமயம், அதுகுறித்துக் கருத்து கூற நான் பயப்படமாட்டேன். நான் விளையாட்டை மட்டுமே பார்ப்பேன். விளையாட்டை விளையாட்டாக பார்க்கிறேன். அனைவருக்குமே சர்வதேச அளவில் கிரிக்கெட் நலமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பும், கவலையும் உள்ளது. அதையே நான் எதிரொலிக்கிறேன் என்றார் அவர்.