இந்திய அணியின் ஆதிக்கம்
உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக தான் இந்தியா திகழ்ந்துள்ளது. குறிப்பாக இதுவரை நடைபெற்றுள்ள உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவிடம் தோல்வி ஒன்றையே பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந்த முறை அதனை மாற்றி அமைக்க கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்திய அணியோ வழக்கமான போட்டியை போல நம்பிக்கையுடன் உள்ளது. இந்திய வீரர்கள் இப்படி நம்பிக்கையுடன் இருப்பதற்கு கடந்த கால முடிவுகளே காரணம். அவை எப்படி கிடைத்தது என்பதை பார்க்கலாம்.
2007 டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை தொடரில் முதன் முறையாக கடந்த 2007ம் ஆண்டு லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய இந்த போட்டி சமனில் முடிவடைந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி ராபின் உத்தப்பாவின் அரைசதம் மூலம் 141 -9 என்ற ஸ்கோர் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 47 - 4 விக்கெட் என தடுமாறியது. பின்னர் மிஸ்பா உல் அக் அதிரடியான அரைசதம் மூலம் கடைசி பந்தில் சமனானது. இதன் பின்னர் பவுல் அவுட் முறைப்படி இந்திய வீரர்கள் அசத்தலான வெற்றியை பதிவு செய்தனர்.
த்ரில் வெற்றி
2007ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியில் கம்பீர் 75 ரன்களும், ரோகித் சர்மா 30 ரன்களும் விளாச 157 என்ற ஸ்கோர் வந்தது. இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி மிஸ்பா உல் அக்கிடம் மீண்டும் சிக்கியது. எனினும் ஜோகிந்தர் சிங் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
4 வருட இடைவெளி
2007ம் ஆண்டுக்கு பிறகு 2012ம் ஆண்டு தான் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியாவின் பக்கம் வெற்றி வாய்ப்பு சாய்ந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 128 ரன்களுக்குள் சுருண்டது. பின்னர் விராட் கோலி 78 ரன்கள் விளாச இந்திய அணி 16 ஓவர்களுக்குள் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
2014ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை
இதன் பின்னர் நடைபெற்ற 2014ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்தியாவின் பக்கமே முதலில் இருந்து வெற்றி வாய்ப்பு இருந்தது. இந்திய பவுலர்கள் முகமது ஷமி மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் விக்கெட் மழை பொழிய 20 ஓவர்களில் பாகிஸ்தானால் 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியது.
201 டி20 உலகக்கோப்பை தொடர்
கடைசியாக நடைபெற்ற 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் கையே ஓங்கியிருந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் திணறியது. இதற்கேற்றார் போல மழையின் குறுக்கீடு இருக்க 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதில் விராட் கோலி 37 பந்துகளில் 55 ரன்களை விளாசி இருந்தார். தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.