லண்டன்: இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பந்து எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது என்ற விவரங்களை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
நடப்பு உலக கோப்பை தொடர் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து முன்னேறின. முதல் அரையிறுதியில், நியூசிலாந்து இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து வீழ்த்தியது.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் உலக கோப்பை லீக் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்து, ஸ்கோர்ஷீட்கள், மற்றும் டாஸ் போடப்பட்ட காயின் உள்ளிட்டவை ஆன் லைன் மூலம் ஏலத்தில் விடப்பட்டது.
அதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்திய பந்து அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டது. அதே போல அந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட, டாஸ் காயின், ஒரு லட்சத்துக்கும், ஸ்கோர் ஷீட் 75 ஆயிரத்துக்கும் ஏலம் கேட்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்திய பந்து, 300 அமெரிக்க டாலர்களுக்கும், ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்திய பந்து, 150 அமெரிக்க டாலர்களுக்கும் ஏலம் போனது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பதட்டம், பல ஆண்டுகளாக இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது ஆகியவை காரணங்களாக பார்க்கப்படுகிறது. இது தவிர, இரு அணிகள் மீதும் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பும், அதற்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.