ஷாகின் அப்ரிடி வேகம்
தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், கே..எல்.ராகுல் ஒற்றை இலக்க ரன்னிலும் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி வேகத்தில் வீழ்ந்தனர். சூர்யகுமார் யாதவும் ஏமாற்றம் அளித்தார். 33 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர் கேப்டன் கோலியும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும்.
பாகிஸ்தான் அபார வெற்றி
கோலி 56 ரன்கள், ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுக்க ஜடேஜா, ஹார்திக் பாண்ட்யா மோசமாக சொதப்ப இந்தியா வெறும் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. சவால் அளிக்க கூடிய இலக்கு என்று சொல்லப்பட்டாலும், இதனை மிக எளிதாக்கினார்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான். பேட்டிங்கை போலவே, ஒட்டு மொத்த பவுலர்களும் சொதப்ப 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்.
கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பாலா?
இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 8 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 ரன்களில் அவுட்டானார். ஷாகின் அப்ரிடி பவுலிங்கில் அவர் போல்டனார். ஆனால் கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பால் என்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஷாகின் அப்ரிடி அந்த பந்தை வீசும்போது பவுலிங் கிரீஸுக்கு வெளியே காலை வைத்து விட்ட வீடியோ, புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அம்பயர் தூங்கி விட்டார்
இந்த பந்து நோ-பால் என்றும் அம்பயர் இதனை கவனிக்காமல் விட்டுவிட்டார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''இதை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை.
இது ஒரு நோ பால்'' என்று நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ''களத்தில் இருந்த அம்பயர்தான் தூங்கி விட்டார். 3-வது நடுவர் என்ன செய்தார்?'' என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.