இமாலய இலக்கு
தொடக்க வீரர்கள் டிகாக் 27 ரன்களுக்கும், மாலன் 6 ரன்களுக்கும் வெளியேறியதால் அந்த அணி தடுமாறியது. எனினும் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா மற்றும் வாண்டர் டுசன் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். அவர்கள் இருவரும் 3வது விக்கெட்டிற்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க 50 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.
சிறப்பான ஓப்பனிங்
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 12 ரன்களுக்கு வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஷிகர் தவான் ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடி வந்த தவான் 79 ரன்களுக்கும், விராட் கோலி 51 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
அடுத்தடுத்து விக்கெட்
கோலியின் விக்கெட்டிற்கு பிறகு எந்தவொரு வீரரும் பெரியளவில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. ரிஷப் பண்ட் 16 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 2 ரன்களுக்கும் நடையை கட்டி ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த ஷர்துல் தாக்கூர் மட்டும் கடைசி வரை ஒற்றையாளாக போராடினார். அவருக்கு ஜஸ்பிரித் பும்ரா பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
ஷர்துலின் போராட்டம்
8வது விக்கெட்டிற்கு சேர்ந்த இந்த ஜோடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. எனினும் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரனகள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய ஷர்துல் தாக்கூர் 50 ரன்களுடனும், பும்ரா 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அடுத்த ஆட்டம்
இந்த தோல்வியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 - 0 என பின் தங்கியுள்ளது. இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியும் பார்ல் நகரத்தில் உள்ள போலாண்ட் பார்க் மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது.