கவுகாத்தி : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, முதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நாளைய ஆட்டத்தில் களமிறங்குகின்றனர்.
இந்திய அணி வீரர்கள் 2 நாள் ஓய்வுக்கு பிறகு , இன்று தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவுகாத்தியில் இந்திய அணி 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இங்கு இந்திய அணி 2 போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவி இருக்கிறது. கடைசியாக இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இருக்கிறது.
ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிராஜ்க்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம். இதே போன்று சாஹல் அணிக்கு திரும்புவாரா, இல்லை அஸ்வின் பிளேயிங் லெவனில் தொடருவாரா என்ற குழப்பமும் நீடிக்கிறது.
நாளைய ஆட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய ஏதேனும் ஒரு வீரருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முனவரிசை வீரர்கள் ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி தர முடியும்.
பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, அஸ்வின், 10, ஹர்சல் பட்டேல், 11,ஆர்ஸ்தீப் சிங்