பெங்களூர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் நடுவேயான 2வது டெஸ்ட் போட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா-இந்தியா நடுவேயான 2வது டெஸ்ட் பெங்களூரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல்நாளில் 214 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆன நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், பெங்களூரில் பெய்த மழை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த 2வது நாள் ஆட்டம், ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதேபோல மூன்றாவது நாள் ஆட்டம் நேற்றுமுன்தினம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
நேற்று காலை முதல் பெங்களூரில் பெரிய அளவில் மழையில்லாமல் இருந்தது. ஆனால், மைதானத்தில், ஈரப்பதம் இருப்பதால், இன்று மதியம் உணவு இடைவேளை கடந்த பிறகும், ஆட்டம் தொடங்கவில்லை. இதன்பிறகு ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை லேசான தூரலுடன் பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று, காலை லேசான தூரல் இருந்தது. அதன்பிகு வெயில் அடிக்க தொடங்கியது. இருப்பினும், மைதானத்தை உலத்தி ஆட்டத்தை தொடங்கச் செய்ய மதியம் ஆகிவிடும் என்பதால், அரை நாளில் ஆட்டத்தின் ரிசல்ட் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து, ஆட்டம் டிரா ஆனதாக காலை 11.45 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தது. ஆனால் மழை பெய்ததால் இந்தியாவால் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டி நாக்பூரில் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கி்ல் இந்தியா முன்னிலை வகிக்கிறது.