இந்திய அணிக்கு கட்டாயம்
முதல் இன்னிங்ஸிலேயே தென்னாப்பிரிக்க அணி கடும் சவால் கொடுத்ததால் 2வது இன்னிங்ஸில் அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. ஆனால் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 7 ரன்களுக்கும், கே.எல்.ராகுல் 10 ரன்களுக்கும் வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய புஜாரா 9 ரன்களுக்கு நடையை கட்டினார்.
ரிஷப் பண்ட் அதிரடி
சீனியர் வீரர்களே இப்படி தென்னாப்பிரிக்க பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடி ரன் குவிப்பை செய்தார். பிட்ச், பந்தின் ஸ்விங் என எதை பற்றியும் கவலைக்கொள்ளாத ரிஷப் பண்ட் பவுண்டரி மழையுடன் அரைசதம் கடந்தார். அவரின் ஆட்டத்தை பார்த்த கேப்டன் விராட் கோலியே தனது ஆட்டத்தை நிதானமாக்கிக்கொண்டு அவரை அடித்து ஆட கூறினார். இது ஆச்சரியமாக இருந்தது.
பண்ட் அதிரடி சதம்
ஒருபுறம் விக்கெட்கள் சரிய தொடர்ந்து அதிரடி காட்டி விளையாடி வந்த ரிஷப் பண்ட், 133 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர் என சதமடித்து அசத்தினார். இந்தியாவின் இந்த 2வது இன்னிங்ஸில் 50 சதவீத ரன்களை ரிஷப் பண்ட் தான் அடித்துள்ளார். இது அவரின் 4வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன
ரிஷப் பண்ட் இப்படி ரன்களை குவிக்க அவரின் அதிரடி தான் முக்கிய காரணம். கேப்டவுன் பிட்ச்-ல் பந்து நன்கு ஸ்விங் ஆவதால் நீண்ட நேரம் பொறுமையாக விளையாடினால் ஏதேனும் ஒரு பந்தில் சிக்கி எட்ஜாகி விக்கெட் விழும். இதனை புரிந்துக்கொண்டு பண்ட், வரும் அனைத்து பந்துகளையும் எப்படியாவது பேட்டின் மையப்பகுதியில் படும் படி ஷாட் ஆடிக்கொண்டே இருந்தார். அவுட் ஃபீல்டும் வரண்டு இருந்ததால், அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரிக்கு சென்றது. ஆட்டத்தின் 3வது செஷன் வரை 95 பந்துகளை சந்திருந்த பண்ட் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 77 ரன்களை விளாசினார்.
புஜாரா ஃபார்முலா
இதே ஃபார்முலாவில் தான் முதல் இன்னிங்ஸில் சீனியர் வீரர் புஜாரா 7 பவுண்டரிகளுடன் 44 ரன்களை அடித்தார். ஆனால் 2வது இன்னிங்ஸில் நிதானமாக ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து தொடரில் கூட இதே ஃபார்முலாவை தான் ஷர்துல்தாக்கூர் செய்து அரைசதம் அடித்தார். எனவே அதிரடி ஆட்டக்காரர்களை ஸ்விங் அதிகம் உள்ள பிட்ச்-களில் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த விட்டாலே அதிக ரன் வரும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.