ஒருநாள் சர்வதேச போட்டிகள்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி நாளை தர்மசாலாவில் துவங்கவுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இந்த தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், நேற்று முதல் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதன் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ரிலாக்ஸாக இருந்த இந்திய வீரர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக எதிரணி வீரர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு கைகுலுக்க மாட்டோம் என்று தென்னாப்பிரிக்க அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அவர்கள் வலைப்பயிற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால், இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் இந்திய அணி வீரர்கள் ரிலாக்ஸாக தங்களது பயிற்சிகளை தொடர்ந்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு
தர்மசாலாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், அதிகமானோர் கூடும் இந்த போட்டிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் கழகம் தெரிவித்துள்ளது. மைதானத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகளை காண முடிந்தது. மேலும் ஸ்கேனர் கருவிகள் உள்ளிட்டவற்றை கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலட்சியம் காட்டும் பிசிசிஐ
தர்மசாலாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு ஒன்றுகூடினால், வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பிசிசிஐ, இந்தியா -தென்னாப்பிரிக்கா தொடரிலும் அதே உறுதியுடன் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த ஆண்டு தர்மசாலாவில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படவில்லை. மக்கள் சிறிய அளவிலேயே தங்களது கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டனர். மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது.
மழையால் போட்டி தடைபடுமா?
இதனிடையே, இன்றும் நாளையும் தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறியுள்ள நிலையில், மழையால் போட்டி பாதிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா -தென்னாப்பிரிக்காவிற்கு இடையில் தர்மசாலாவில்நடைபெறவிருந்த டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில், இந்த முறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.