சர்வதேச ஒரு நாள் தொடர்
இந்தியா -தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் தர்மசாலாலாவில் முதல் போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் தனிப்பட்ட முறையில் சில சாதனைகளை நிகழ்த்த கோலி தயாராகி வருகிறார். அவற்றைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். முதல் சாதனை.. டிராவிட், கங்குலி ஆகியோர் வைத்துள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அதிகபட்ச ரன்கள்.
சாதனை முறியடிக்கப்படுமா?
டிராவிடும், கங்குலியும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்துள்ளனர். டிராவிட் 1313 ரன்களையும், கங்குலி 1309 ரன்களையும் குவித்துள்ளனர். டிராவிட்டின் சராசரி 50.50, கங்குலியின் சராசரி 39.66 ஆகும். கோலி இதுவரை 1287 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 64.35. இந்தத் தொடரில் கங்குலி, டிராவிடை விராட் கோலி முந்த நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
ரன்கள் போட்டதில் சச்சினே முதலிடம்
அதேசமயம், இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நம்ம சச்சின் டெண்டுல்கர்தான். அவர் 57 போட்டிகளில் 2001 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 35.73 ஆகும். எனவே சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் காலம் தேவைப்படும். அதுவரை சச்சினே நம்பர் ஒன் வீரராக தொடர்ந்து கோலாச்சிக் கொண்டிருப்பார்.
இன்னொரு சாதனை முறியுமா?
2வது சாதனை.. இது சச்சின் சம்பந்தப்பட்டது. கோலி தற்போது 43 ஒரு நாள் சதங்களை வைத்துள்ளார். சச்சின் சாதனை 49 ஆகும். எனவே சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 7 சதங்கள் தேவை. கடைசியாக அவர் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக சதம் போட்டிருந்தார். அதன் பிறகு அவர் சதம் அடிக்கவே இல்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் 5 சதம் போட்டுள்ளார். கோலி போட்டிருப்பது 4. எனவே இந்த சாதனையை அவர் இந்தத் தொடரில் முறியடிக்கலாம்.
தெ.ஆ. கையே ஓங்கியிருக்கு
இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்காதான் அதிக வெற்றிகளை கையில் வைத்துள்ளது. அதாவது 46 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 35 போட்டிகளில்தான் வென்றுள்ளது. 3 போட்டிகளில் முடிவு ஏற்படவில்லை. இந்தத் தொடரை இந்தியா வெற்றிகரமாக கைப்பற்றி ரசிகர்களுக்கு குஷி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.