முதல் டி20 போட்டி
இந்திய அணி வீரர்கள், டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான கடைசி தொடர் இதுவாகும். இதனை முடித்துவிட்டு நேரடியாக ஆஸ்திரேலியா செல்கிறது. எனவே இந்த தொடரில் வெற்றி பெற்று, அதே நம்பிக்கையுடன் செல்ல முனைப்பு காட்டும். மறுபுறம் தென்னாப்பிரிக்க அணியும் நெதர்லாந்து அணியை வீழ்த்திவிட்டு நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது.
இந்திய அணிக்கு சவால்
இந்நிலையில் இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவின் கை சற்று ஓங்கியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய களங்களில் தான் தென்னாப்பிரிக்க வீரர்கள் அச்சுறுத்தலாக உள்ளனர். இதுவரை இரு அணிகளுக்கு இடையேயும் இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்தியா 3 முறையும், தென்னாப்பிரிக்கா 5 முறையும் வெற்றிகளை கண்டுள்ளன.
என்ன காரணம்
எனவே இந்திய அணியை விட தென்னாப்பிரிக்க அணி இந்திய களங்களை நன்கு புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர். அந்த அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக இந்தியாவில் அதிக போட்டிகளில் விளையாடுகிறார்கள். இதனால் பிட்ச்-ன் தன்மை குறித்தும், இந்திய வீரர்களின் பலவீனம் குறித்தும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.
சம பலம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை மொத்தமாக 20 முறை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இந்திய அணி 11 முறையும், தென்னாப்பிரிக்க அணி 8 முறையும் வெற்றி கண்டுள்ளன. எனவே இந்த தொடரில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.