பெங்களூர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் நடுவேயான 2வது டெஸ்ட் போட்டியின் நாலாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா-இந்தியா நடுவேயான 2வது டெஸ்ட் பெங்களூரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல்நாளில் 214 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆன நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், பெங்களூரில் பெய்த மழை காரணமாக, நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த 2வது நாள் ஆட்டம், ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அதேபோல மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று முற்றிலுமாக கைவிடப்பட்டது. இன்று காலை முதல் பெங்களூரில் பெரிய அளவில் மழையில்லாமல் இருந்தது. ஆனால், மைதானத்தில், ஈரப்பதம் இருப்பதால், இன்று மதியம் உணவு இடைவேளை கடந்த பிறகும், ஆட்டம் தொடங்கவில்லை.
இதன்பிறகு ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை லேசான தூரலுடன் பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை 5வது நாள் ஆட்டம் நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியே.