வல்லுநர்களின் ஆலோசனை
போட்டி நடைபெறும் ப்ரேமதசா மைதான பிட்ச்-ல் எவ்வளவு சீக்கிரம் விக்கெட்களை எடுக்கின்றோமோ அந்த அளவிற்கு சாதகமான சூழல் நிலவும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருந்தனர். முதல் போட்டியின் போது பவர் ப்ளே ஓவரில் இந்திய வீரர்கள் எடுத்த விக்கெட்கள்தான் வெற்றிக்கு அடித்தளம் போட்டுக்கொடுத்தது. எனவே 2வது போட்டியிலும் அதே திட்டத்துடன் இந்திய அணி களமிறங்கியது.
சிறப்பான தொடக்கம்
ஆனால் அதற்கு வேட்டு வைத்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் மணிஷ் பாண்டே. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் ஓப்பனர்கள் அவிஷிங்கா ஃபெர்னாண்டோ - மினோத் பனுக்கா ஜோடி சிறப்பான அடித்தளத்தை அந்த அணிக்கு அமைத்துக் கொடுத்துள்ளனர். சீரான வேகத்தில் பவுண்டரிகளை அடித்த இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்களை சேர்த்தனர். மினோத் பனுகா 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
முதல் கேட்ச் தவறியது
இவர்களின் இந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே உடைந்திருக்க வேண்டியது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தை அவிஷிங்கா தடுப்பாட்டம் ஆட முயன்றார். ஆனால் அவுட் ஸ்விங்காக வந்த பந்து பேட்டில் எட்ஜாகி கேட்ச் வாய்ப்பானது. வேகமாக சென்ற அந்த பந்து 2வது ஸ்லிப்பாக நின்றுக்கொண்டிருந்த மணிஷ் பாண்டே டைவ் அடித்தும் பிடிக்க முடியாமல் போனது. இந்த கேட்ச் மிகவும் சிரமமான ஒன்று என்பதால் பாண்டே மீது யாரும் குறை கூறவில்லை.
கோபத்தில் ரசிகர்கள்
ஆனால் அதற்கு அடுத்த ஓவரிலேயே பிடிக்க வேண்டிய கேட்சை மிஸ் செய்தார் மணிஷ் பாண்டே. 2வது ஓவரின் கடைசி பந்தை தீபக் சாஹர் வீச பேட்ஸ்மேன் பனுக்கா தடுப்பாட்டம் ஆடினார். அப்போது பந்து எட்ஜாகி மீண்டும் 2வது ஸ்லிப்பில் நின்றுக்கொண்டிருந்த பாண்டேவிடம் சென்றது. அப்போது மிகவும் அசால்டாக செயல்பட்ட அவர், பிடிக்க வேண்டிய கேட்சை கோட்டைவிட்டார். அவர் விட்ட கேட்ச்-ன் விளைவாக இலங்கை அணி முதல் விக்கெட்டிற்கு 77 ரன்களை எடுத்து வலுவான நிலைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக மணிஷ் பாண்டேவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.