மீண்டு வந்த தருணம்
இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. முதலில், 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருக்கட்டத்தில் அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது, 180 ரன்களை கூட எட்டமுடியாது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், களமிறங்கும் ஒவ்வொரு வீரரும் கணிசமாக 20 - 30 ரன்கள் அடித்துவிட்டு போக, அப்படி இப்படி என்று அந்த அணி 262 ரன்களை எட்டியது. கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 19 ரன்களை குவித்தது அந்த அணி. அதுவும் புவனேஷ் குமார் ஓவரில். இது உண்மையில், இந்திய ரசிகர்களுக்கு சற்று ஷாக் தான். அவர்கள் இவ்வளவு ரன்கள் அடித்ததற்கு அல்ல. புவனேஷ் குமார் ஓவரில், பரிச்சயமே இல்லாத இலங்கை இளம் வீரர் கருணரத்னே 19 ரன்கள் பறக்கவிட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
முதல் பந்தே சிக்ஸ்
இதையடுத்து, இந்திய அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, ப்ரித்வி ஆரம்பம் முதலேயே தனது வழக்கமான "அட்டாக்" மோடில் விளையாடத் தொடங்கினார். அவர் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில், 9 பவுண்டரிகள் அடக்கம். இதன்பிறகு களமிறங்கிய இஷான் கிஷன், தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்ற பதற்றம், பயம் எதுவும் இன்றி, அவர் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டார். அடுத்த பந்து பவுண்டரி. களமிறங்கிய முதல் 2 பந்தில் 10 ரன்கள்.
இந்தியா வெற்றி
ஸ்பின், ஃபாஸ்ட் என பாரபட்சம் பார்க்காமல் விளாசினார். 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில், 2 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடக்கம். பிறகு மெல்ல மெல்ல கேப்டன் தவான் தனது கியரை மாற்றி அவரும் அரைசதம் அடித்தார். இறுதியில், அவர் 86 ரன்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி 36.4வது ஓவரிலயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
நாட்டுக்காக கொடுப்பேன்
இந்த வெற்றிக்கு பிறகு, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இஷான் கிஷன், "என் கனவு நிஜமானது. இதைவிட சிறந்த தருணம் எனக்கு அமையாது. இந்திய அணியின் நீல நிற ஜெர்ஸியை அணிவது என்பது அத்தகைய மரியாதையை தருவதாகும். உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றி. தொடர்ந்து கடினமாக உழைத்து, என் நாட்டுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என்று கூறியுள்ளார்.