உலகக்கோப்பை கனவு
டி20 உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வை மனதில் வைத்து இலங்கை தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்கள் மற்றும் இந்திய அணியில் சரிவர வாய்ப்பின்றி இருக்கும் வீரர்கள் இந்த அணியில் அடங்கியுள்ளனர். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உலகக்கோப்பை அணிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இந்நிலையில் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்ட்யாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அறுவை சிகிச்சை
கடந்த 2019ம் ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்ட்யா பந்துவீச்சில் இருந்து பெரும் அளவில் விலகியுள்ளார். இவர் பந்துவீச முடியாது என்று கூறிய காரணத்தால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே இலங்கை தொடரை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டால் தான் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கமுடியும் என்ற நிலை உள்ளது.
மோசமான பந்துவீச்சு
ஆனால் அவரோ இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் மோசமாக விளையாடியுள்ளார். பாண்ட்யா மீண்டும் பந்துவீச்சு செய்தாலும், அதில் பெரிய அளவிலான தாக்கம் இல்லை. 2 போட்டிகளையும் சேர்த்து 9 ஓவர்களை மட்டுமே வீசியுள்ள அவர், 54 ரன்களை விட்டுக்கொடுத்த ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார். குறிப்பாக நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 4 ஓவர்களை மட்டுமே வீசிய அவர், விக்கெட் எதுவும் எடுக்காமல் 20 ரன்களை வாரி வழங்கினார்.
பேட்டிங்
இவற்றை எல்லாத்தையும் விட மோசமான பேட்டிங் ஃபார்மில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய சூழல் அமையாவிட்டாலும், 2வது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சரிவில் இருந்த இந்திய அணியை மீட்க வேண்டும் என்ற முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் 2வது பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தவறான ஷாட்டுக்கு முற்பட்ட போது இலங்கை கேப்டன் தசுன் சனகா டைவிங் கேட்ச் மூலம் அவுட்டாக்கினார்.
எதிர்காலத்திற்கு சிக்கல்
கிடைத்த 2 வாய்ப்புகளிலும் ஹர்திக் பாண்ட்யா பெரிய அளவில் சோபிக்கவில்லை. தற்போது பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டுள்ள வீரர்கள் தான் 3வது ஒருநாள் போட்டியில் களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது. எனவே அதில் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைக்காது. அவரின் மோசமான ஃபார்மினால் டி20 தொடரிலும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே அவரை இனி அணியில் எடுப்பது குறித்து யோசிக்கவேண்டுமா என தேர்வுக்குழு அதிகாரிகள் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.