ஓப்பனிங்
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் தவான் - சஞ்சு சாம்சன் ஜோடி நிதான ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 51 ரன்களை குவித்தது. 20 பந்துகளில் 27 ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் அசரங்கா பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆனார்.
சிறப்பான பார்ட்னர்ஷிப்
மிகவும் குறைவான ஸ்கோருடன் திணறி வந்த இந்திய அணியை ஷிகர் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி மீட்டனர். அதிரடியாக விளையாடிய தவான் 46 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களுக்கும் அவுட்டானார். கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற சூழலிலும் ஹர்திக் பாண்ட்யா 10 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்தார். இஷான் கிஷான் மட்டும் (20) கடைசி சில ஓவர்களில் சிறிது அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.
எதிர்பார்பு
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைத்தது. அவிஷிங்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா அதிரடியாக ரன் குவித்தனர். எனினும் அவர்களால் முதல் விக்கெட்டிற்கு 23 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அவிஷிங்கா 26 ரன்களுக்கும், மினோத் பனுகா 10 ரன்களுக்கும் வெளியேறினர்.
படு தோல்வி
இதன் பின்னர் வந்த வீரர்களில் சாரித் அசலங்கா மட்டும் தான் அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார். தனஞ்செய டி சில்வா (9), அசென் பாண்ட்ரா (9), தசுன் சனகா (16), வானிண்டு ஹசரங்கா (0), சாமிகா (3), இசுரு உதானா (1), துஷ்மந்தா சமீரா (1) என அடுத்தடுத்து மோசமான ரன்களில் வெளியேறினர். இதனால் 18.3 ஓவர்களிலேயே அந்த அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 -0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்கள், தீபக் சஹார் 2 விக்கெட்களும் எடுத்தனர்.