தொடக்கமே சரிவு
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் - ஷிகர் தவான் ஜோடி 5 ரன்களுக்குள் பிரிந்து ஏமாற்றம் அளித்தது. கேப்டன் தவான் ஒரு ரன்னை கூட எடுக்காமல் டக் அவுட்டானார்.
சரிந்த விக்கெட்கள்
இதன் பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் கூட அணியின் ஸ்கோரை மீட்கவில்லை. அடுத்தடுத்த ஓவர்களில் இந்திய அணியின் விக்கெட் சீட்டுக்கட்டை போல சரிந்தது. தேவ்தத் பட்டிக்கல் 9 ரன்களுக்கும் ருத்ராஜ் கெயிக்வாட் 14 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
ஏமாற்றம்
நீண்ட நாட்களாக சர்வதேச வாய்ப்புகாக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டி கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் 55 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு புறம் நிதிஷ் ராணா 6 ரன்களுக்கு அவுட்டானார்.
டார்கெட்
டெயில் எண்டர்ஸான புவனேஷ்வர் குமார் 16 ரன்களுக்கும், குல்தீப் யாதவ் 23 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும், குறைவான ஸ்கோரை எப்படி கட்டுப்படுத்த போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.