ஒருநாள் சர்வதேச தொடர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது இந்திய அணியுடன் ஒருநாள் சர்வதேச தொடரில் மோதி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி கொண்ட நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை சமன் செய்துள்ளது.
தெறிக்க விட்ட இந்திய வீரர்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வி கண்ட நிலையில், அதை கவனத்தில் கொண்டு, விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தெறிக்க விட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா
போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய வீரர் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் சதமடித்து அணியை பலப்படுத்தினர்.
இந்த ஆண்டில் 7வது சதம்
ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரிகளையும் சிக்ஸ்களையும் விளாசிய ரோகித் ஷர்மா, 138 பந்துகளில் 159 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது 28வது சதத்தை அவர் பூர்த்தி செய்தார். மேலும் இந்த ஆண்டில் அவர் அடித்துள்ள 7வது சதம் இது.
பார்ட்னர்ஷிப்பில் 227 ரன்கள்
ரோகித் ஷர்மாவிற்கு ஈடுகொடுத்து விளையாடிய துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலும் சதமடித்தார். 104 பந்துகளில் அவர் 102 ரன்களை குவித்தார். ரோகித் ஷர்மா மற்றும் கே.எல். ராகுல் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 227 ரன்களை விளாசினர்.
இளம் வீரர்களின் சாதனை
இதேபோல ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து 4 ஓவர்களில் 72 ரன்களை தெறிக்க விட்டனர். அவர்களின் இந்த வெறித்தனமான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் ரசிகர்களை வெகுவாக குஷியாக்கியது.
280 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்
இந்திய அணி 387 ரன்களை அடித்த நிலையில் அடுத்ததாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் சாய் ஹோப், நிகோலஸ் பூரன் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் 43.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களில் மேற்கிந்திய தீவுகள் அணி சுருண்டது.
2 போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்து சாதனை
போட்டியில் சிறப்பான பந்துவீச்சை அளித்த குல்தீப் யாதவ், அடுத்தடுத்து சாய் ஹோப், ஜாசன் ஹோல்டர் மற்றும் அல்சாரி ஜோசப் போன்ற வீரர்களை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் எடுத்துள்ள இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டுகள் இவை. இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமை குல்தீப்பிற்கு கிடைத்துள்ளது.
இந்தியா தொடரை கைப்பற்றுமா?
இந்தியா -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 22ம் தேதி கட்டாக்கில் நடைபெறவுள்ள 3வது போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.