புளோரிடா: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான முதல் டி20 கிரிகெட் போட்டி இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிற்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் அமெரிக்காவின் புளோரிடா மாகாகத்தில் உள்ள லாடெர்ஹில் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொங்குகிறது.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் டி20 தொடர் அங்கு நடத்தப்படுகிறது. அமெரிக்காவில், சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்த மைதானம் என்று ஐ.சி.சி. அங்கீகரித்துள்ள ஒரே மைதானம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விராத் கோஹ்லி தலைமையில் விளையாடிய இந்திய அணி, தற்போது டி20 தொடரில் டோணி தலைமையில் களம் இறங்குகிறது. டி20 போட்டிகளை பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகள் தான் நடப்பு சாம்பியன் என்பதால், இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியதாவது: நானும், டோணியும் நீண்ட காலம் இணைந்து விளையாடி இருக்கிறோம். ஆனால் கேப்டன், பயிற்சியாளர் என்ற முறையில் தற்போது முதல்முறையாக கூட்டணி அமைக்கிறோம். டோணியுடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறேன். அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கிரிகெட் போட்டிகளுக்கான ஏற்பபாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இப்போட்டியை காண நிறைய இந்திய ரசிகர்கள் வந்து உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
உலக சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி ஆல்-ரவுண்டர் கார்லஸ் பிராத்வெய்ட் தலைமையில் களம் இறங்குகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், ஆந்த்ரே ரஸ்செல், பொல்லார்ட் என்று அதிரடி வீரர்கள் உள்ளதால் பந்து நாலா பக்கமும் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிம்மோன்ஸ் கூறியதாவது: டி20 தொடருக்கு நாங்கள் நன்றாக தயாராகி உள்ளோம். டி20 உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தியதால், அதற்கு பழிவாங்க முயற்சிக்கும் நோக்கில் இந்திய அணி களம் இறங்கும். மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரை எந்தகைய சவாலையும் சமாளிக்கும் என்று கூறினார்.
ஐ.சி.சி. டி20 அணிகளின் தரவரிசையில் நியூசிலாந்து 132 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 128 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 122 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையே இதுவரை 5 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 2-போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 3-போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா அணி: டோணி(கேப்டன்), அஸ்வின், ஸ்டுவர்ட் பின்னி, பும்ரா, ஷிகர் தவான், ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி, புவனேஸ்குமார், அமித் மிஸ்ரா, முஹமது சமி, ரகானே, கேஎல் ராகுல், ரோகித் சர்மா, உமேஷ் யாதவ்.
மேற்கிந்திய தீவுகள் அணி: கார்லஸ் பிராத்வெய்ட், சாமுயேல் பத்ரி, டிவைன் பிராவோ, ஜான்சன் சார்லஸ், ஆன்ரு பிளெட்சர், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், லெவிஸ், சுனில் நரைன், பொல்லார்டு, ஆன்ரு ரஸ்செல், மார்லன் சாமுயேல்ஸ், லென்டி சிம்மோன்ஸ்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 3, மற்றும் விஜய் சூப்பர் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.