ஜிம்பாப்வே தொடர்
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் கே.எல்.ராகுல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட படை ஜிம்பாப்வேவுக்கு சென்றுள்ளது. இந்த தொடரில் விளையாடுவதை வைத்து சில வீரர்களுக்கு ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனையடுத்து ஒருவாரம் முன்பாகவே ஜிம்பாப்வேவுக்கு சென்றடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பிசிசிஐ கட்டுப்பாடு
இந்நிலையில் ஹோட்டலில் உள்ள இந்திய வீரர்களுக்கு குளிப்பதற்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், வீரர்கள் குளிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல், வெகு விரைவாக வந்துவிட வேண்டும். வழக்கமாக நடத்தப்படும் நீச்சல் குளம் செஷன்கள் எதுவும் கிடையாது எனக்கூறியுள்ளது.
என்ன காரணம்
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரமான ஹராரேவில் தான் இந்திய அணி தங்கியுள்ளது. அங்கு கடந்த ஓராண்டிற்கும் மேலாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அங்கு தவித்து வருகின்றனர். இன்னும் சில பகுதிகளில் சாக்கடை நீர் கூட மறு சுத்தகரிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதிர்வலைகள்
இதுபோன்ற சூழலில் கிரிக்கெட் வீரர்கள் சொகுசாக நீண்ட நேரம் குளியலால் தண்ணீரை வீணாக்குவதும், நீச்சல் குளங்களில் ஈடுபடுவதும் அதிர்வலையை ஏற்படுத்தும். இதன் காரணமாக தான் இந்திய வீரர்களுக்கு தண்ணீரில் பல்வேறு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.