இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள்
இந்திய மக்களைப் பாராட்டியுள்ள அக்தர், மீடியாக்களைத்தான் போட்டுத் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தானில் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூறும்போது இவ்வாறு குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில், இந்தியா அருமையான நாடு. இந்திய மக்கள் அற்புதமானவர்கள். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மீது இந்திய மக்கள் துவேஷம் காட்டியதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மீடியாக்கள்தான் பிரச்சினையே
ஆனால் அவர்களது மீடியாக்கள்தான் பிரச்சினையே.. நாளையே பாகிஸ்தானுடன் போர் வருவது போலவே பேசுகிறார்கள். இந்திய மக்கள் உண்மையில் போரை விரும்பவில்லை. இந்தியாவில் பல இடங்களுக்கு நான் போயுள்ளேன். அந்த நாட்டை, அந்த மக்களை வெகு ஆழமாக பார்த்திருக்கிறேன். உண்மையில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவே இந்தியா விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.
வளர்ச்சியில் இந்தியா விருப்பம்
பாகிஸ்தான் மூலமான வளர்ச்சியைத்தான் இந்தியா விரும்புகிறது. இதை நான் உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தானை தவிர்த்த வளர்ச்சியை இந்தியா விரும்பவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவுக்குப் பெரும் இழப்பு ஏற்படும். இதுவரை 110க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த இழப்பை இந்தியா நிச்சயம் சமாளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் துயரம் வருத்தம்தான்
தற்போது இந்தியா சந்தித்து வரும் இந்த துயரம் துரதிர்ஷ்டவசமானது. இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் தற்போது அபாயத்தில் உள்ளது. சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த உலகமுமே மூடப்பட்டது போல உள்ளது என்றார் சோயப் அக்தர்.