முதல் சர்வதேச ஒருநாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவகள் அணி நடந்து முடிந்த சர்வதேச டி20 போட்டித் தொடரை இந்திய அணியிடம் இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்க உள்ளது.
முன்னாள் வீரர்கள் ஆரூடம்
சர்வதேச டி20 தொடரை இந்தியாவிடம் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த ஒருநாள் போட்டித் தொடரை வெல்வதற்காக கடுமையான முயற்சி மேற்கொள்ளும் என்று அனில் கும்ப்ளே உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
10வது தொடரை கைப்பற்ற கடும் முயற்சி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா மோதிய 9 தொடர்களில் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 10வது தொடரை வெற்றி கொள்ள கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளது.
வீரர்கள் மாற்றம்
இந்திய அணியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக இந்த தொடரில் ஷிகர் தவான் இடம்பெறாத நிலையில், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இடம்பிடித்துள்ளார்.
ரிஷப் பந்த் முன்னேற்றம் காட்டுவாரா?
அணியின் முக்கியமான 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி பேட்டிங் செய்யவுள்ளார். இந்நிலையில் தோனிக்கு மாற்றாக பார்க்கப்படும் ரிஷப் பந்த், இந்த தொடரில் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி
காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இந்த தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக ஷர்துல் தாகுல் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆயினும் முகமது ஷமி தலைமையிலான தீபக் சஹர் உள்ளிட்டோர் அணியில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் ஷர்துல் தாகுலுக்கு தன்னுடைய திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பம் வாய்க்குமா என்பது சந்தேகமே.
பௌலர்களும் தயார்
கீரன் பொலார்டு, சாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், பிராண்டன் கிங் உள்ளிட்டவர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் டீம், திறமைனயான இந்திய அணி வீரர்களின் பௌலிங்கை சமாளிக்க தயாராக உள்ளது. மேலும் உலக கோப்பை போட்டிகளில் தங்களுடைய திறமையை நிரூபித்த அணியின் பௌலர்களும் இந்திய வீரர்களுக்கு சவாலாக அமைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.