கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் உலகம் முடங்கி உள்ளது. இங்கிலாந்து அணி ஜூலை மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை உச்சகட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் நடத்தி வருகிறது.
சிக்கல்
இந்த நிலையில், திட்டமிட்டபடி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்களை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. 2020 டி20 உலகக்கோப்பை அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்தது. தற்போது உள்ள சூழலில் அந்த தொடரை நடத்த முடியாது என்பதால் அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
யார் நடத்துவது?
2021ஆம் ஆண்டு ஏற்கனவே இந்தியாவில் ஒரு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது. அதனால் தள்ளி வைக்கப்பட்ட 2020 டி20 தொடரை எந்த ஆண்டு யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அது குறித்த முடிவு ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
டி20 உலகக்கோப்பை குறித்த முடிவு
2021 டி20 உலகக்கோப்பையை இந்தியாவும், தள்ளி வைக்கப்பட்ட 2020 உலகக்கோப்பை தொடரை 2022இல் ஆஸ்திரேலியாவும் நடத்த முடிவு எட்டப்பட்டது. இந்த முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்க்ஸ் உடன் பேசி முடிவு செய்தனர்.
மகளிர் உலகக்கோப்பை
இந்த ஐசிசி கூட்டம் 2021 மகளிர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை குறித்து முடிவு எடுக்கவே கூட்டப்பட்டது. அந்த தொடர் 2021 பிப்ரவரி 6 முதல் மார்ச் 7 வரை நடைபெற இருந்தது. தற்போது அந்த தொடரை 2022 பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளது ஐசிசி. அந்த தொடர் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.