தோல்வியுற்ற இந்திய மகளிர்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மகளிர் ஒருநாள் மற்றும் டி20 தொடர் அடுத்தடுத்து நிகழ்ந்தது. இந்த இரு தொடர்களிலும் இந்திய மகளிர் கோட்டை விட்டனர். கொரோனா தாக்கம் காரணமாக ஏறக்குறைய 12 மாதங்களுக்கு பிறகு இந்த தொடர்கள் நடைபெற்ற நிலையில் இரு தொடர்களையும் வெற்றி கொண்டனர் தென்னாப்பிரிக்க மகளிர்.
டி20 தொடரில் பங்கேற்கவில்லை
ஒருநாள் தொடரில் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி இரு போட்டிகளில் அரைசதம் மற்றும் 40 ரன்களை அடித்திருந்தார். ஆனால் கடந்த 17ம் தேதி நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை.
தனிமைப்படுத்திக்கொண்ட கவுர்
இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுளளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தொடருக்கு பின்பே பாதிப்பு
இந்நிலையில் லக்னோவில் நடைபெற்ற கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த தொடருக்கு பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.