ஆண்டின் இறுதி தொடர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவுடன் 3 சர்வதேச டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. ஆண்டின் இறுதி தொடர்களான இவை இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
வெறும் கைகளுடன் ஊர்திரும்பும் மேற்கிந்திய தீவுகள்
இந்த இரு தொடர்களிலுமே மேற்கிந்திய தீவுகள் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா ஒரு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. ஆயினும் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தின் முன்பு ஈடுகொடுக்க முடியாமல் இரு தொடர்களிலுமே 2க்கு 1 என்ற கணக்கில் கோப்பையை தவறவிட்டுள்ளது.
கட்டாக்கில் நடைபெற்ற 3வது போட்டி
சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றிருந்த நிலையில் கட்டாக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக இருந்தது.
கட்டாக்கில் விறுவிறு ஆட்டம்
மேற்கிந்திய தீவுகள் அணி தன்னுடைய பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆயினும் இந்திய அணியினரின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது.
மைதானத்தை கலக்கிய விராட் கோலி
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆன கேப்டன் விராட் கோலி, நேற்றைய 3வது போட்டியில் தன்னுடைய விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
பார்ட்னர்ஷிப்பில் கலக்கல்
முதலில் களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப்பில் 122 ரன்களை அடித்தனர். இதையடுத்து ரோகித் ஷர்மா 63 ரன்களிலும், கே.எல்.ராகுல் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
விராட் கோலி சிறப்பான ஆட்டம்
தொடர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கேதார் ஜாதவ் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஒரு கட்டத்தில் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. ஆயினும் விராட் கோலி, தன்னுடைய நிதானமான மற்றும் சிறப்பான ஆட்டத்தால் 85 ரன்களை அடித்து வெற்றிக்கு வழிகோலினார்.
கைக்கொடுத்த ஷர்துல் தாக்கூர்
வெற்றிக்கு 30 ரன்கள் மீதமிருந்த வேளையில் விராட் கோலி ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து பரபரப்பான இறுதி கட்ட ஆட்டத்தை வழங்கி இந்தியாவின் வெற்றியை வசமாக்கினர். 8 பந்துகள் மீதமிருந்த வேளையிலேயே இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாத்தியப்படுத்திய இந்திய வீரர்கள்
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா மோதிய கடந்த 9 தொடர்களில் தொடர் வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய வெற்றியுடன் அந்த அணியுடனான 10வது தொடரை தொடர்ந்து வெற்றி கொண்டு சாதனை புரிந்துள்ளது.