குறுக்கிட்ட மழை
இந்த போட்டியில் டாஸ் போட்ட உடனே மழை குறுக்கிட்டது. இந்திய நேரப்படி இரவு 8.50 மணிக்கு தொடங்கிய மழை நீண்ட நேரமாகியும் விடுவதாகவே இல்லை. இறுதியில் இரவு 11.20 மணிக்கு மழை கருணை காட்டியதால், போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
திணறிய அயர்லாந்து
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். ஓப்பனிங் வீரர்கள் ஸ்ட்ரிலிங் (4), பால்பிர்னி (0), டாலானி (8), டக்கர் (18) என அடுத்தடுத்து வெளியேறியதால் அந்த அணி 8.4 ஓவர்களில் 72 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
இலக்கு
100 ரன்களுக்குள் அயர்லாந்து அணியை சுருட்டிவிடுவார்கள் என எதிர்பார்த்த போதுதான் ஒரே ஒரு வீரர் மட்டும் சிம்ம சொப்பனமாக நின்றார். 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹேரி டெக்டர் என்ற வீரர் மட்டும் கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 64 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் 12 ஓவர்களில் அந்த அணி 108/4 ரன்களை சேர்த்தது.
ஓப்பனிங்கில் ட்விஸ்ட்
111 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே ட்விஸ்ட் இருந்தது. ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு பதிலாக தீபக் ஹூடா - இஷான் கிஷான் ஓப்பனிங் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய ஹூடா 29 பந்துகளில் 47 ரன்களும், இஷான் 11 பந்துகலில் 26 ரன்களையும் குவித்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
கேப்டன் இன்னிங்ஸ்
இதன் பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது பங்கிற்கு 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 12 பந்துகளில் 24 ரன்களை சேர்க்க, இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.