அடுத்தடுத்த 3 தொடர்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் அடுத்தடுத்து நடந்தது. முதலில் ஆடப்பட்ட 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 3க்கு 1 என்ற கணக்கிலும் அடுத்ததாக விளையாடப்பட்ட டி20 தொடரை 3க்கு 2 என்ற கணக்கிலும் இந்தியா வெற்றி கொண்டது.
இந்தியா அபார வெற்றி
இந்நிலையில் கடந்த 23ம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 3 தொடர்களையும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி பெற்று, இங்கிலாந்தை கோப்பைகள் எதுவுமின்றி வெறுங்கையுடன் நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
3 வீரர்கள் அரைசதம்
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 330 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக கொடுத்தது. ரிஷப் பந்த், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா அரைசதங்களை அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆயினும் இந்த பிட்ச்சில் கடந்த போட்டியில் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றதால் இந்த ஸ்கோர் குறைவானதாக பார்க்கப்பட்டது.
சிறப்பான பௌலிங்
ஆயினும் இந்திய பௌலர்கள் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி வெற்றியை இந்தியாவிற்கு சொந்தமாக்கினர். ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அதிரடி கிளப்பினர். இதனிடையே, இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை தாக்கூர் வீழ்த்தியுள்ளார்.
இறுதிவரை போராட்டம்
இங்கிலாந்து அணி வீரர்களும் இன்றைய போட்டியில் வெற்றி கொண்டு, ஒரு தொடரையாவது வெற்றி கொள்ள இறுதிவரை போராடினர். சாம் கரண், வுட் ஆகியோர் இறுதிவரை வெற்றிக்கான முயற்சியை மேற்கொண்டனர். ஆயினும் இந்திய பௌலர்களின் அதிரடியில் அவர்கள் முயற்சி வீணானது. இதையடுத்து இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைகொண்டது.