சுற்றுப்பயணம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடைரில் முன்னிலை வகித்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.
இறுதி போட்டி
இரு அணிகள் மோதிய 4வது டெஸ்ட் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ரோகித் மட்டுமே சிறப்பாக ஆட மற்ற கோலி, சுப்மன் கில், ரஹானே ஆகியோர் சொதப்பினர்.
நம்பிக்கை
இதனையடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தால் சதம் ( 101) அடித்தார். மேலும் அறிமுக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் - அக்ஷர் பட்டேல் ஆகியோர் முறையே 96 & 43 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 365 ரன்கள் சேர்த்தது. மேலும் இங்கிலாந்தை விட 160 ரன்கள் முன்னிலை வகித்தது.
சொதப்பல்
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அஸ்வின் & அக்ஷர் சுழலில் சிக்கி திணறினர். அணியில் டான் லாவ்ரன்ஸ் மட்டும் அரை சதம் அடிக்க மற்ற அனைவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஜோ ரூட் 30 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் அந்த அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 - 1 என தொடரையும் கைப்பற்றியது.
இறுதி போட்டியில் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து ஏற்கனவே இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி நடக்கவுள்ளது.