இரண்டு தொடர்களில் இந்தியா தோல்வி
இந்தியா -நியூசிலாந்து இடையில் நடந்து முடிந்துள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
2 போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் இந்த ஆட்டம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடுப்பான ரசிகர்கள்
வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் 10 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ள இந்தியா, தற்போது கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வது போட்டியிலும் படுதோல்யை கண்டுள்ளது. இரண்டு போட்டிகளும் 3வது நாளிலேயே நிறைவடைந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் எதிரணியான நியூசிலாந்திற்கு சிறிதும் 'டப்' கொடுக்காமல் சாவகாசமாக இந்தியா விளையாடியது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியுள்ளது.
விராட் கோலி விளக்கம்
இந்நிலையில் இரண்டு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். இரண்டு போட்டிகளிலும் பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை அளித்த போதிலும் போதிய ரன்கள் இல்லாததால் வெற்றி கைவசப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சாக்குபோக்கு கூறமுடியாது
சொந்த மண்ணை தவிர்த்து அன்னிய மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிரத்தையுடன் விளையாட வேண்டியதன் அவசியத்தை தற்போது இந்திய அணி உணர்ந்துள்ளதாகவும், இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் பலவீனம்
இந்தியாவின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக நியூசிலாந்து பயன்படுத்திக் கொண்டதாகவும், அதிலிருந்து மீளமுடியாமல் இந்தியா திணறியதையும் ஒப்புக்கொண்ட விராட் கோலி, எதிரணி கொடுத்த நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலை இரண்டு போட்டிகளிலும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.