கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு
பிசிசிஐ-யின் விதியில் இருந்து தப்பிக்க ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்ற தகவல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்காக ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.
தி ஹண்ட்ரட் தொடர்
அது என்ன ஹண்ட்ரட் தொடர்? இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு கண்டுபிடித்துள்ள புதிய கிரிக்கெட் ஆட்டம் தான் தி ஹண்ட்ரட். ஒரு இன்னிங்க்ஸ்-க்கு நூறு பந்துகள் கொண்ட போட்டி. டி20 போட்டிகளில் 120 பந்துகள் இருக்கும் நிலையில், அதன் சுருக்கப்பட்ட வடிவம் தான் இது.
தேவையில்லாத ஒன்று
இது தேவையில்லாத முயற்சி என பலரும் கருத்து கூறி வந்தாலும், இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜூலையில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 20 அன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஹர்பஜன் சிங் பெயர்
அந்த வீரர்கள் தேர்வில் ஹர்பஜன் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஹர்பஜன் சிங் தன் பெயரை 1,00,000 பவுண்டு (87 லட்சம் ரூபாய்) பிரிவில் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு, ஹண்ட்ரட் தொடரிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
பிசிசிஐ விதி
ஆனால், பிசிசிஐ விதிப்படி பிசிசிஐ-க்கு கீழ் செயல்படும் இந்திய வீரர்கள் யாருக்கும் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதி இல்லை. அதனால், ஹர்பஜன் சிங் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார்.
ஓய்வு பெற வேண்டும்
பிசிசிஐ விதியை சமாளிக்க ஒரே வழி அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும். பிசிசிஐ அதை ஏற்றுக் கொண்ட பின், அவர் தி ஹண்ட்ரட் தொடரில் ஆட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுப் பெறலாம்.
ஹர்பஜன் ஓய்வு திட்டம்
அதனால், ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவிக்கப் போகிறார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம், ஓய்வு அறிவிப்பதால் வேறு சிக்கல் ஏதேனும் வருமா? என்று அவர் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இனி வாய்ப்பு இல்லை
இந்திய அணியில் ஹர்பஜன் சிங் இனி இடம் பெற வாய்ப்பு இல்லை. அவர் ஐபிஎல் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தினாலும் கூட அவர் வயதை காரணம் காட்டி அவரை அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள்.
ஹர்பஜன் நிலை
ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் இல்லாமல், ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெற்றால் தான் பிசிசிஐ வெளிநாட்டு தொடரில் ஆட அனுமதிக்கும் என ஒரு சிலர் கூறுகின்றனர்.
பிசிசிஐ மறுப்பு
இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஹர்பஜன் சிங் தி ஹண்ட்ரட் தொடரில் தன் பெயரையே கொடுக்கவில்லை என எங்களிடம் கூறி இருக்கிறார் என தலைகீழாக கூறினார். ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவிப்பாரா?