கிரிக்கெட் முடக்கம்
கிரிக்கெட் உலகம் கடந்த மூன்று மாதங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. இப்போதும் கிரிக்கெட் போட்டிகளை துவங்காமல் போனால் சில ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்ற நிலையில் தான் உலகின் முன்னணி கிரிக்கெட் நாடுகள் உள்ளன.
கொரோனாவுக்கு நடுவே கிரிக்கெட்
கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் எனும் பெருந் தொற்று நோய்க்கு நடுவே நடக்க உள்ளது. அதனால், ஐசிசி அமைப்பு மருத்துவர் குழுவின் ஆலோசனையுடன் வீரர்கள் பாதுகாப்பாக கிரிக்கெட் விளையாட விதிமுறைகளை வகுத்துள்ளது.
எச்சில் பயன்படுத்தக் கூடாது
அந்த விதிமுறைகளை வகுத்த குழுவின் தலைவர் அனில் கும்ப்ளே தான். அவர்கள் அறிவித்த விதிகளில் முக்கியமானது இனி வீரர்கள் பந்தின் மீது எச்சில் பயன்படுத்தக் கூடாது என்பது தான். ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ரிவர்ஸ் ஸ்விங் சிக்கல்
வேகப் பந்துவீச்சாளர்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை கடினமாக மாற்றி, பளபளப்புத்தன்மையை அதிகரித்து ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்கள். ஆனால், இப்போது எச்சில் பயன்படுத்த முடியாது என்பதால் கடும் சிக்கல் எழுந்துள்ளது. வியர்வை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
முகமது ஷமி
ஆனால், அதுவும் சரியான தீர்வு அல்ல என இந்திய பந்துவீச்சாளர்கள் கூறி உள்ளனர். இது பற்றி இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வித்தகர். அவர் கூறுகையில், எச்சில் பயன்படுத்த முடியாது என்பது மிகப் பெரிய சவால் என்றார்.
இர்பான் பதான்
முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதானும் பந்தை ஸ்விங் செய்வதில் தேர்ந்தவர். அவர் கூறுகையில், ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வியர்வை, எச்சில் போல சரியாக செயல்படாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐசிசி பிட்ச்களை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்க வேண்டும் என்றார்.
சாஹல் என்ன சொன்னார்?
வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பந்தை டிரிப்ட் செய்ய சிக்கல் தான் எனக் கூறி உள்ளார் சுழற் பந்துவீச்சாளர் சாஹல். சுழற் பந்துவீச்சில் டிரிப்ட் செய்யும் போது காற்றின் திசைக்கு ஏற்ப பந்து நகரும். அதற்கு அதன் எடை எச்சிலை பயன்படுத்தி மாற்றப்பட்டு இருக்க வேண்டும்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் கூறுகையில், பந்து வியர்வை மட்டுமே பயன்படுத்தினால் அதிக எடை கொண்டு இருக்கும். ஆனால், பளபளப்பு அடையாது. அப்படி இருந்தால் காற்றில் நிற்காது. பந்து சுழல்வதிலும் சிக்கல் தான். பந்துவீச்சாளர்களுக்கு தான் அதிக சிக்கல் என்றார்.