நியூசிக்கு வாய்ப்பு
கிட்டத்தட்ட 2 வருட பயணம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தியா உள்ளிட்ட அனைத்து அணிகளும் விளையாடிய காலங்கள் இது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு டெஸ்ட் போட்டிகளை வென்று, தொடர்களை வென்று, படாதபாடுபட்டு இறுதிப் போட்டிக்குள் அணியை கொண்டு வந்தார் கேப்டன் விராட் கோலி. ஆனால், இவ்வளவு போராடியும் கடைசியில் இந்திய அணி கோப்பையை நழுவ விட்டிருக்கிறது. நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஏந்தியுள்ளது.
தொடர் தோல்வி
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், கடந்த 7 ஆண்டுகளாக, இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை என்பது தான். ஆம்! கடந்த 2014 ஆண்டு முதல், இந்திய அணி ஐசிசியின் மிகப்பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும், கோப்பையை வெல்லவில்லை. அரையிறுதிப் போட்டி அல்லது இறுதிப் போட்டி வரை முன்னேறி, தோற்கும் அவலம் இப்போதும் நீடிக்கிறது.
சோக பயணம்
2014ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்றது முதல் தொடங்கியது இந்த சோக படலம். அதன் பிறகு, 2015 உலகக் கோப்பை தொடர் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி, 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் தோல்வி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி, 2019 உலகக் கோப்பைத் தொடர் அரையிறுதிப் போட்டியில் இதே நியூஸிலாந்திடம் தோல்வி, இப்போது 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் மீண்டும் நியூஸிலாந்திடம் தோல்வி என இந்தியாவின் சோக பயணம் இன்னும் தொடருகிறது.
அருமையான வாய்ப்பு
எனினும், அணி மீதுள்ள இந்த கரையை இந்த வருடமே துடைக்க இந்தியாவுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது. இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. அதில், வெற்றிப் பெறும் பட்சத்தில், விராட் கோலி தன் மீதான 'கேப்டன்சி' விமர்சனத்தை நிச்சயம் துடைக்கலாம்