வருடாந்திர சோதனை சோதனை
ஒவ்வொரு வருடமும் சர்வதேச போதை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவானது உலகில் இருக்கும் முக்கிய விளையாட்டு வீரர்களை சோதனை செய்வது வழக்கம். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், தடகளம் என எந்த விதமான விளையாட்டு முறையாக இருந்தாலும் அதில் உள்ள வீரர்களின் மீது சோதனை நடத்தப்படும். இந்த சோதனையின் முடிவுகள் தவறாக வரும் பட்சத்தில் அந்த வீரர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போட்டிகளில் கலந்து கொள்வதில் இருந்து தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
கிரிக்கெட்டிலும் சோதனை
இந்த நிலையில் கிரிக்கெட் உலகிலும் பல வீரர்கள் மீது இந்த சோதனை நடத்தப்பட்டது. அதன்படி இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என பல நாடுகளில் இருந்து வீரர்கள் சோதனைக்கு ஆளானார்கள். இந்த 2016ஆம் ஆண்டுக்கான சோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த வீரர்கள் யாரும் ஊக்கமருந்து உபயோகிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இந்தியாவை சேர்ந்த வீரர் ஒருவர் மட்டும் ஊக்கமருந்து உபயோகித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எந்த இந்திய வீரர்
இந்த நிலையில் யார் அந்த இந்திய வீரர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இன்னும் சில வாரங்களில் அந்த தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இந்திய வீரர் தடை செய்யப்பட்ட ஏ.எஃப்.எஃப் என்ற ஊக்க மருந்தை பயனபடுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் 2013ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த பிரதீப் சங்வான் என்ற கிரிக்கெட் வீரர் ஊக்கமருந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ கருத்து
இந்த விவகாரம் குறித்து தற்போது பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது. அதில் "அந்த வீரரின் பெயர் இன்னும் குறிப்பிடப்படவில்லை. அவரின் பெயர் வந்த பின் தான் மற்ற முடிவுகள் எடுக்கப்படும், கண்டிப்பாக அவர் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடும் பிளேயர் கிடையாது. ஆகவே இந்த குற்றச்சாட்டில் சிக்கியது எதோ ஒரு ஐபிஎல் இல்லை ரஞ்சி கோப்பை பிளேயர் தான். சர்வதேச போதை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவு அறிக்கை அளித்த பின் பிசிசிஐ இதுகுறித்து முடிவு எடுக்கும்" என்று கூறியுள்ளனர்.